Australia

 
 
 
 
 
'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்த பிரபல புத்தகசாலை உரிமையாளர் கைது
2009-03-06

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் சிறீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கொழும்பில் கைது செய்யப்பட்டு கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய வான் தாக்குதல் தொடர்பான கட்டுரையும் அது தொடர்பான படங்களும் பிரசுரிக்கப்பட்டிருந்த 'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்தமை தொடர்பாகவே சிறீதரசிங் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளனர்.

'ஆனந்த விகடன்' வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள 'பூபாலசிங்கம்' புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான பொதியை இரத்மலானை வானூர்தி நிலையத்திற்கு அனுப்பியபோது அதனை சோதனையிட்ட காவல்துறையினர் குறித்த விடயங்கள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் படங்கள் இருப்பதை கண்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதனை அடுத்து, நேற்று வியாழக்கிழமை மாலை இறக்குமதியாளரான சிறீதரசிங்கின் வெள்ளவத்தை வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் அவரை கைது செய்து கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக உறவினர்கள் பிரதி அமைச்சர் இராகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளனர்.

'ஆனந்த விகடன்' வார இதழை 'பூபாலசிங்கம்' புத்தகசாலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1981 ஆம் ஆண்டு ஆவணி மாதம் யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், யாழ். பொது நூல் நிலையம் ஆகியவை சிங்கள காடையர்களாலும் படையினராலும் திட்டமிடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டபோது யாழ். நகரின் மத்தியில் இருந்த 'பூபாலசிங்கம்' புத்தகசாலையும் பெருந்தொகையான நூல்களுடன் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
Previous NewsHome Next
 
GTV PortalGTV HomeABOUT GTV | JOIN GTV | SCHEDULEPROGRAMSGTV NEWSCUSTOMER CAREADVERTISE ON GTV | CONTACT US

© 2008 Global Tamil Vision. All rights reserved

 

Developed & Hosted By NMBS