 நோர்வேயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இக்கவனயீர்ப்பு போராட்டம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் 3:00 மணிவரை நடைபெற்றது.
இலங்கையின் இன முரண்பாட்டில் பிராந்திய வல்லரசான இந்தியாவின் வகிபாகம் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற அடிப்படையில், தமிழர்கள் மீது சிறிலங்கா கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்புப் போரை நிறுத்துவதற்குரிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது என இதில் வலியுறுத்தப்பட்டது.
கவனயீர்ப்பில் கலந்து கொண்ட மக்கள், இந்தியாவை நோக்கிய கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளைத் தாங்கி நின்றனர்.
- போர் நிறுத்தத்தின் அவசியம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு அமைய நிபந்தனையற்ற உடனடிப் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்
- தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்பினை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்
- ஐக்கிய நாடுகள் சபையின் உதவி நிறுவனங்கள், அனைத்துலக உதவி நிறுவனங்கள், அனைத்துலக கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை வன்னிக்குள் செல்ல அனுமதித்தல் வேண்டும்
- தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்
- தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா விலக்க வேண்டும்
ஆகிய கோரிக்கைகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கவனயீர்ப்பு நிறைவில் நோர்வேக்கான இந்தியத் தூதுவர் பான்பிட் ஏ.ரோய் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கோரிக்கை மனு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
|